ஜனநாயக ரீதியான போராட்டத்துக்கு இளைஞர்கள் தயாராக வேண்டிய நிலை ஏற்படலாம்: மாவை அறிவிப்பு
எதிர்காலத்தில் தேவைப்பட்ட நேரத்தில் ஜனநாயக ரீதியான தர்ம முறைப்படியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். இதற்கு நமது தமிழ் இளைஞர்களும் மக்களும் தயாராக வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு விபுலானந்தா கலாலயத்தில் நடைப்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபைக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் செ.இராசையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர், இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கண்டும் குறிப்பாக சனல் 4 போன்ற காட்சிகளை கண்டும் உலகம் இன்று கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
"துன்பத்தை அதிகம் தாங்கும் இனம் தான் இறுதியில் வெற்றி பெற்று வந்த உலக வரலாறுகள் உண்டு என்பதை எளிதில் மறந்து விடமுடியாது. முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்குப் பின்னர் எமது மக்கள் ஹிரோசிமாவில் அன்று வீசப்பட்ட அணு குண்டின் பாதிப்பைவிடவும் மிக மோசமான பாதிப்பை தமிழ் மக்கள் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். வட கிழக்கில் எமது பலத்தை திட்டமிட்டு பலவீனமாக்கும் வகையில் இராணுவ அடக்குறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மக்களின் வளங்களைக்கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இங்கு இடம்பெறுகின்றன.
வளம் கொழிக்கும் எமது விவசாய நிலங்கள் கூட இன்று இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு பெரும்பான்மை இனத்தினருக்கு வழங்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. வடகிழக்கு தமிழர்கள் தாயகமெனும் நிலத்தொடர்ச்சியான தத்துவத்தை தந்தை செல்வா நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார். ஆனால் நாம் எமது மண்ணில் உத்துடையவர்களல்ல என்ற ரீதியில் சிங்கள மயமாக்கலையும் அரசு மேற்கொள்கின்றது.
வீதிகளின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றும் திட்டமிட்ட செயல்கள் நம் மண்ணில் முனைப்புக்கொண்டுள்ள நிலையில் பௌத்த சிலைளும் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நமது மனித உமைகளையும் அடிப்படை உமைகளையும் தகர்ப்பதற்கும் அரசு திட்ட மிட்டுச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. எங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் பலமாக இருக்கின்றனரோ அங்கெல்லாம் பலத்தை தகர்க்கச் செய்து நிரூபிப்பதற்கு அத்தனை நடவடிக்கைகளையும் அரசு செய்துகொண்டிருக்கின்றது. மகிந்த சிந்தனையின் பெயரால் இத்தனையும் நடந்து கொண்டிருக்கின்றன.
எனவே நம்மிடம் மிஞ்சியுள்ள பலம் ஜனநாயக பலம் தான். இந்த ஜனநாயக பலத்தை நாம் பயன்படுத்த வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் நமக்கு அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. இதனை பன்மடங்கு உறுதிப்படுத்துவதற்கு நம் மக்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நமது இலக்கை அடைய இதன் மூலம் வழிவகுக்க ஒன்றுப்பட்ட சக்தி மூலம் சபைகளின் ஆட்சியை நிறுவுவோம்.
நாம் வாழ வேண்டும், ஆள வேண்டும் எம் மண்ணில் நாம் ஆள வேண்டும், மீண்டும் புதிய ஜனநாயக சக்தியை நம் வாக்குப்பலம் மூலம் உருவாக்குவோம்" எனவும் மாவைசேனாதிராஜா தெரிவித்தார்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012 17:14)
