இனப் பிரச்சினைக்கு அரசிடம் எந்தத் தீர்வுத் திட்டமும் இல்லை: கூட்டமைப்பை அரசு ஏமாற்றுவதாக கூறுகிறது ஜே.வி.பி.
இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. அதிகாரப் பகிர்வு குறித்து எதிர்வரும் 29ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் பதில் அளிப்பதாக அரசு கூறியது வெறும் ஏமாற்று என்றும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின்சில்வா தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் தீர்வு முன்வைக்கப்படும் என்று அமைச்சர் கெஹலியரம்புக்வெல கூறினார். அவர் கூறிய சில தினங்களில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத 13ஆம் திருத்தச்சட்டம் தீர்வாக முன்வைக்கப்படும் என்று ஜனாதி பதி கூறினார்.இந்த இருவரின் கூற்றும் ஒன்றுக்கொன்று முரண் படுகிறது. இது சர்வதேசத்தையும், உள்நாட்டு மக்களையும் ஏமாற்றும் செயல்.
தீர்வு யோசனை முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதித் தேர்தலின்போது அரசு கூறியது. ஆனால், அது முன்வைக்கப்படவில்லை. பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் இதே வாக்குறுதி வழங்கப்பட்டது. எனினும், அத்தேர்தலின் பின்னரும் அது முன்வைக்கப்படவில்லை.
இப்போது அரசியல் தீர்வுபற்றி அரசு கூறி வருகின்றது. இதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார். தெரிவுக்குழு தேவையில்லை. அரசின் தீர்வை நாட்டு மக்களுக்குக் காண்பித்தால் போதும். மக்கள் அவர்களின் கருத்தைக் கூறுவார்கள்.
இதுவரை நடைபெற்ற பேச்சுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் முன்வைத்திருக் கும் கோரிக்கைக்கு 29ஆம் திகதி பதிலளிக்கப்படும் என்று அரசு கூறியது. ஆனால், அரசிடம் எந்தவித மான பதிலும், தீர்வும் கிடையாது என்றார்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012 14:09)
