கல்முனை, காரைதீவில் 21 வருடமாக இயங்கிய அதிரடிப்படை முகாம்கள் மூடப்பட்டன
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காரைதீவு ஆகிய இடங்களில் கடந்த 21 வருடங்களாக இயங்கிய விசேட அதிரடிப்படை முகாம்கள் இன்றுடன் மூடப்படுகின்றன. இங்கிருந்து அதிரடிப்படையினரும் முழுமையாக வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை கட்டட உரிமையாளர்களை அழைத்து கட்டடங்களை ஒப்படைக்கும் பணி இடம் பெற்றது. காரைதீவு விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பி. பந்துல தலைமையிலான குழுவினர் இன்றுடன் முற்று முழுதாக வெளியேறுகின்றனர்.
கடந்த ஒருவார காலமாக படைத் தளபாடங்கள் அகற்றப்பட்டு லொறிகளில் அனுப்பப்பட்டுவந்தன. 1990 வன்செயலின் பின்னர் அமைதியை நிலைநாட்டுவதற்காக விசேட அதிரடிப்படையினர் முதன் முதல் இங்கு கொண்டுவரப்பட்டனர். இம் முகாம் கிழக்கு மாகாணத்தின் பிரதான கட்டளையிடும் முகாமாக திகழ்ந்தது. சிங்க றெஜிமண்டின் இராணுவ உயரதிகாரி எம். அமரசேகர மேற்படி முகாமை அமைத்திருந்தார்.
காரைதீவு உதவி அரச அதிபர் பணி மனை, காரைதீவு பிரதேச சபைக் காரியாலயம், விபுலானந்த ஞாபகார்த்த நூலகம் மற்றும் தனியார் கட்டடங்கள் இம்முகாமிற்குள் கொண்டுவரப்பட்டு பலத்த காவலிடப்பட்டன. தனியார் வீடுகளுக்கு வாடகையும் வழங்கப்பட்டு வந்தது. சிலருக்கு நில வாடகை வழங் கப்பட்டு வந்தன. விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதியாகவுள்ள நிமால் லியூக்கே காரைதீவு முகாமில் ஆரம்பத்தில் சேவையாற்றியவராவார். காரைதீவு முகாமிலிருந்து வெளியேறும் படையினர் மல்வத்தை வவுனியா போன்ற பிரதேசங்களுக்குச் செல்கின்றனர்.
இதேவேளை, கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட விசேட அதிரடிப்படை முகாமும் இன்று முற்றாக மூடப்படவுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், அறுகம்பை, கோமாரி, அக்கரைப்பற்று, கஞ்சிக்குடிச்சாறு, காஞ்சிரம் குடா, சாகாமம், வம்மியடி, திருக்கோவில் போன்ற விசேட அதிரடிப்படை முகாம்களிலிருந்து ஏற்கனவே படையினர் வெளியேறி முகாம்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012 17:14)

