இலங்கையை பிளவுபடுத்த இந்தியாவுக்கு சர்வதேச சக்திகள் அழுத்தம்: பிரதமர் ஜயரட்ண
இலங்கையைப் பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள சில சர்வதேச சக்திகள் அதற்காக இந்தியா மீதும் அழுத்தங்களைக் கொடுக்கின்றன என இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கின்றார்.
சில நாடுகள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு இலங்கையை அவமானப்படுத்த முயன்றுகொண்டிருக்கின்றன. இந்த நாடுகள் இலங்கையில் தலையிடுமாறு இந்தியாவுக்கும் அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக சர்வதேச சமூகம் பேசிக்கொண்டிருக்கின்றது. ஆனால், கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போரினால் ஏற்பட்ட அழிவுகளையிட்டு அவர்கள் பேசுவதற்குத் தயாராகவில்லை எனவும் கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது பிரதமர் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் வெளிநாடுகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இவற்றையிட்டு யாரும் பேசிக்கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்தநிலையில் நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேறகொண்டுவருகின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012 14:09)

