பிரித்தானிய பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம்
பிரித்தானியாவின் நாடாளுமன்ற வளாகத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் ஒன்று நாளை வியாழக்கிழமை இடம்பெற இருப்பதாக நாடு கடந்த அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், பிரித்தானியா அரசியல் மட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கெடுக்கின்றனர்.
தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் - பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுதல் தொடர்பிலான விவகாரம் மற்றும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் நா.த.அரங்சாங்கத்தின் வகிபாகம் ஆகிய விடயங்களை முன்னிறுத்தியதாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐநா நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, அனைத்துல நீதிவிசாரணை மற்றும் அனைத்துலக பொறிமுறை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவினையும், இதற்கான அழுத்தம் அரச மட்டத்தில் மேற்கொள்வதற்கு வேண்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 ஜூன் 2011 07:07)

