சனல் 4 ஆவணப் படத்தின் எதிரொலி: விசாரணை நடத்துமாறு பிரித்தானியா அழுத்தம்
'இலங்கையின் கொலைக்களம்' எனும் இலங்கைப் படைகள் மேற்கொண்ட கொடூர போர்க் குற்றங்களை வெளிப்படுத்தும் ஆவணப்படத்தை பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதைத் தொடர்ந்து இப் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சு இலங்கை அரசக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
'இந்த காணொளி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது' என இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் தெரிவித்தார். சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதற்கான வலுவான ஆதாரங்களை இவ் ஆவணப்படம் முன்வைத்துள்ளது. இந்த போர்க்குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி இலங்கையைத் தூண்டுவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து பிரித்தானிய அரசு 'சகல வழிகளிலும்' முயற்சியை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரித்தானிய பி.பி.சி. செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கை இராணுவம் சட்டத்திற்குப் புறம்பான முறையில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தமைக்கான ஆதாரங்களைக் கொண்ட, இதற்குமுன் வெளிவராத காட்சிகளை சனல் 4 வெளியிட்டுள்ளது. இந்த காணொளியை இலங்கை பாதுகாப்புத்துறை பொய்யானது என நிராகரித்துள்ளதுடன் இது இலங்கை இராணுவத்தின் மீது களங்கத்தை உண்டுபண்ணும் நோக்கம் கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.
ஒரு இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்ட இந்த யுத்தத்தில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பல்வேறு மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
சனல் 4 வெளியிட்ட இந்த ஒருமணிநேர காணொளியில், தமிழர்கள் கொல்லப்படும் காட்சிகளும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் போராளிகளின் நிர்வாணமான உடல்களும் பதிவாகியுள்ளன.
கடந்த இரு ஆண்டுகளாகத் திரட்டப்பட்ட காணொளிப் பதிவுகளையும் சாட்சியங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களைப் பதிவாக்கியுள்ளது.
ஒரு காணொளியில் கைது செய்யப்பட்ட ஒரு பெண் போராளி உட்பட மூன்று பேரை இராணுவம் அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இவர்களை தலையில் சுட்டுக் கொல்லுமாறு இராணுத்தினர் உத்தரவிடும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இக்காணொளியில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடங்களில் அமைந்திருந்த தற்காலிக வைத்தியசாலைகள் மீது இராணுவம் மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதல் குறித்த சாட்சியங்களும் உள்ளன. போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை எனக் கூறிவரும் அரசு இக்குற்றச்சாட்டுகளை வழமைபோல மறுத்துள்ளது. இந்த காணொளிக் காட்சிகள்
திரிபுபடுத்தப்பட்டவை என பெயர் குறிப்பிடாத ஒரு நிபுணர் தெரிவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது.
பல ஆயிரம் மக்களைப் பலிவாங்கிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தம்மை நியாயத்திற்கு புறம்பாக விமர்சிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை அரச படைகள் மேற்கொண்ட போர் மீறல்களை நிருபிக்கும் சாட்சிங்களாக இந்த காணொளிப் பதிவுகள் இருப்பதாக ஐ.நா சபை அதிகாரி கிகிஸ்ரோப் ஹேய்ன்ஸ் தெரிவித்திருந்ததுடன் இந்தக் காணொளிகள் உண்மையானவை எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 ஜூன் 2011 07:35)

