அரசியல் அடைக்கம் நிராகரிக்கப்பட்ட 300 தமிழர்களை நாளை நாடுகடத்துகிறது பிரித்தானியா: அகதிகள் மத்தியில் பெரும் அச்ச நிலை
பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களில் ஒருபகுதியினர் தம்மை இலங்கைக்குத் திருப்பி அனுப்பினால் உயிர் ஆபத்தை தாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்திருக்கும் அதேவேளையில், அரசியல் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள 300 தமிழ் அகதிகளை நாளை வியாழக்கிழமை விஷேட விமானம் ஒன்றில் திருப்பி அனுப்புவதற்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருக்கின்றது.
தாம் நாடுகடத்தப்பட்டால் இராணுவத்தினராலும், இராணுவத் துணைப் படையினராலும் நிச்சயமாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவோம் என இவர்கள் தெரிவித்திருக்கின்ற போதிலும், அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பிரித்தானிய குடிவரவுத் துறை அதிகாரிகள் அவர்களை நாடு கடத்துவது என்பதில் தீவிரமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளையில், பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளனர் என்ற பிரித்தானிய அரசாங்கத்தின் தீர்மானத்தை 'மனித உரிமைகள் கண்காணிப்பகம்' கண்டித்துள்ளது. இலங்கையில் பாதுகாப்பு நடைமுறைகள் முன்னேற்றத்தைக் காணும்வரை, பிரித்தானியாவில் தற்போது வாழும் தமிழர்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படக் கூடாது எனவும் 'மனித உரிமை கண்காணிப்பகம்' கோரியுள்ளது.
"தமது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதன் மூலம் இந்த மக்கள் பல கடினங்களை எதிர்நோக்கலாம் என்பதால் பிரித்தானியா இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என நாம் வலியுறுத்துகிறோம்" என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியப் பிராந்தியத்திற்கான இயக்குனர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளில் ஒரு தொகுதியினருக்கு, பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவதற்கான விமானச் சிட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. "அண்மையில் எனது அடையாள ஆவணங்களை உள்விவகார அலுவலகத்திடமிருந்து பெற்றுக்கொண்ட போதிலும் எனது காரில் சென்றுகொண்டிருந்த பொழுது நான் தடுக்கப்பட்டுள்ளேன். வியாழன் அன்று நான் எனது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்." என தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள ஈழத் தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள அகதிகளின் தொகை மிக அதிகமாக இருக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்கவில்லை" என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது தமது நாடுகளுக்கு இந்த மக்கள் மீள அனுப்பப்படுவதென்பது பொருத்தமற்ற செயல் என பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
"அரசாங்கத்தை எதிர்த்து நின்றவர்கள் தற்போதும் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் தமிழ்ப் புலிகளை எதிர்த்தனர்,ஆனால் இவர்கள் அரசாங்கத்தின் ஆபத்துமிக்க செயற்பாடுகளால் சிலநேரங்களில் பாதிக்கப்பட்டுமுள்ளனர்" என இவர் மேலும் தெரிவித்தார்.
300 தமிழர்களையும் நாளை பலவந்தமாகத் திருப்பி அனுப்புவதற்கு பிரித்தானிய அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரிகின்றது. இதனால் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் மத்தியில் பெரும் அச்சமும், பதற்றமும் உருவாகியிருக்கின்றது. தம்மைத் திருப்பி அனுப்பவதற்கு எதிரான செயற்பாடுகளை இவர்கள் இறுதிவேளையில் மேற்கொள்ளலாம் எனத் தெரிகின்றது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 ஜூன் 2011 20:05)

