பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர் மட்ட கூட்டம்
பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் வெகுசிறப்பாக இடம்பெற்றது. பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர்.
சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், பிரித்தானிய அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை நா.த.அரசாங்கம் உத்தியோகபூவர்மாக அழைத்திருந்தது.
பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர்.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை, தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படும் விவாகாரம் ஆகியன முதன்மை விடயங்களாக விவாதிக்கப்பட்டன.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரைகள் :
தொழிற் கட்சியின் Mitcham - Morden தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh அவர்கள், சிறிலங்காவில் போர் குற்றங்கள் இடம்பெற்றமை வெட்டவெளிச்சமாகியுள்ள நிலையில், தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுகின்றமை, பிரித்தானியா அரசு எடுத்துள்ள தவறான முடிவென சுட்டிக்காட்டினார்.
கொன்சர்வேட்டிவ் கட்சியின் Ilford North தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Lee Scott கருத்துரைக்கையில், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களுக்கு, போதுமான ஆதாரமாக சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் உள்ளதென்றார்.
தொழிற் கட்சியின் Ealing Southall தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Virendra Sharma கருத்துரைக்கையில், சனநாயகரீதியாக நிறுவப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை, ஒரு அரசாங்கத்துக்குரிய மரபுகளுடனேயே தான் நோக்குவதாகவும் ,இன்றைய கூட்டம் ஒரு அரசாங்க மட்டத்திலான கூட்டமாகவே தான் எண்ணுவதாகவும் தெரிவித்தார்.
கொன்சர்வேட்டிவ் கட்சியின் Croydon Central தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Gavin barwell கருத்துரைத்த போது, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற விவாகர குழுவின் ஊடாக, நாடாளுமன்றத்தில் தமிழர்களுடைய இனப்பிரச்னை குறித்து காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களின் கருத்துரைகள்:
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் - செயற்பாடுகள் குறித்து விளக்கவுரை அளித்த, அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள், தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின், போராட்டத்தின் நீட்சியாக சனநாயகவழி தோற்றம் பெற்றதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என தெரிவித்தார்.
தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதுடன், ஈழவிடுதலைப் போராட்டத்துக்கான சர்வதேச சட்ட அங்கீகாரத்தை பெறுவதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நோக்கமென தெரிவித்தார்.
போர் குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவகார அமைச்சர் டிலக்சன் மொறிஸ் உரையாற்றுகையில், தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருவது தி;ட்டமிட்ட இனக்சுத்திகரிப்பே என்றும் இதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதெனவும் எடுத்துரைத்தார்.
தமிழினத்தின் பல்வேறு கூறுகளை அழித்துவரும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் ஒன்றின் சாட்சியமாகவே, சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் உள்ளதென சுட்டிக்காட்டினார். ஓரு சுயாதீனமான அனைத்துலக பொறிமுறையூடாக, தமிழர்களுடைய சுதந்திரத்துக்கு உலகம் உதவவேண்டுமென கேட்டுக் கொண்ட அமைச்சர், ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
தமிழ் அதிகள் திருப்பி அனுப்பப்படும் விவாகாரம் குறித்து உரையாற்றிய உள்துறை அமைச்சின், பிரித்தானிய செயலர் வாசுகி முருகதாஸ், இலங்கையில் மனிதர்களை, தனிநபர்களாக சிறிலங்கா அரசு அணுகுவதில்லை எனவும், இனரீதியாக அணுகும் சிங்கள அரசு, தமிழர்கள் என்ற அடிப்படையிலேயே அணுகுவதாக சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தமிழர்களுக்கு தொடர்சியான உயிர் அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில், தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பப்படுதல் குறித்து பிரித்தானிய அரசு மீளாய்வு செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் பங்கெடுத்திருந்த, உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் கருத்துரைக்கையில், தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை சனநாயகபூர்வ பிரதிபலித்து நிற்கின்ற ஓர் அரசாங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசினை, நாங்கள் பிரகடனப்படுத்தியிருக்கும் நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள், இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூட்டம் நடாத்துவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பு என்பது தமிழர்களுடைய அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள மறைமுக அங்கீகாரமாகவே கருத்தில் கொள்ளவேண்டுமென தெரிவித்தார்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011 10:05)

